ஆஸ்திரேலியாவில் பட்டப்பகலில் பெண்ணுக்கு கத்திக் குத்து!

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் பெரிய கத்தி ஒன்றுடன் வந்த மர்ம நபர் ஒருவர் பெண் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் கிங் தெருவில் இன்று மர்ம நபர் ஒருவர், பொதுமக்களை குறிவைத்து கத்தியால் குத்த முயன்றுள்ளார். அந்த நபரின் கையில் கத்தியைப் பார்த்ததும் சாலையோரம் நடந்து சென்றவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், யார்க் மற்றும் கிங் தெருவின் முனையில் உள்ள ஓட்டல் அருகே, கத்தியுடன் வந்த அந்த மர்மநபர், அங்கே இருந்த பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஒடினார்.
உடனே அருகிலிருந்தவர்களில் ஒருவர் அந்த நபரை விரட்டிப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த பெண்ணை மீட்டு செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரி கேவின் உட் தெரிவிக்கையில், “பொதுமக்களை அந்த நபர் பலமுறை கத்தியால் குத்த  முயன்றுள்ளார், ஆனால் முடியவில்லை. அவரை விரட்டிப் பிடித்த நபருக்கு காவல்துறை சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.