தேசிய விருதை எதிர்பார்க்கவில்லை! – கீர்த்தி சுரேஷ்

மகாநடி படத்தில் சிறந்த நடிகையாக தேர்வு செய்ததற்கு நடிகை கீர்த்தி சுரேஷ், தேசிய விருதை எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

டெல்லியில் 66-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ‘மகாநடி’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். அப்படத்தில் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வேடத்தில் நடத்து இருந்தார்.
கீர்த்திசுரேசுக்கு தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவருடைய சந்தோ‌ஷத்துக்கு இடையே, தேசிய விருது வென்றது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியதாவது:-
“ரொம்ப சந்தோ‌ஷமாக இருக்கிறது. என்ன வார்த்தைகளைப் போட்டு சந்தோ‌ஷத்தை விவரிப்பது என தெரியவில்லை. தற்போது அப்பா அம்மாவுடன் இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. இருவருக்குமே பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளேன். பலரும் வாழ்த்துகள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். மகாநடி’ படத்தில் சின்ன வயதாகவும், பெரிய ஆளாகவும் காட்ட வேண்டும். ஆகையால் அதற்காக உடம்பெல்லாம் குறைக்கவில்லை. எப்படியிருந்தேனோ அதைவிடக் குண்டாக காட்டுவதற்கு மேக்கப் மூலமாக ரொம்ப கஷ்டப்பட்டோம்.
மகாநடி படத்தில் கீர்த்தி சுரேஷ்
நல்லது நடக்கும் என்பது மட்டுமே எண்ணத்தில் இருந்தது. இந்த விருதை அம்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன். ஏனென்றால், அவருக்கு ஒரு தேசிய விருது கிடைக்க வேண்டியதிருந்தது கிடைக்காமல் போய் விட்டது. அவருக்கு அந்த விருதை வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அதைச் சாதித்து விட்டேன் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தேசிய விருது எதிர்பார்க்காத ஒன்று. இதன் மூலம் பொறுப்பு அதிகரித்துள்ளது என நினைக்கிறேன். இந்த விருதால் என்ன மாற்றங்கள் நிகழும் என்பது சில காலங்கள் போனதால் தான் தெரியும்”. இவ்வாறு அவர் கூறினார்.