ஊடகவியலாளர் க.பிரசன்னாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

‘இந்திய வீட்டுத் திட்டம் அமைச்சரின் உணவுக்கும் நிதி ஒதுக்கப்படுகின்றதா?’ என்ற தலைப்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி எழுதப்பட்ட கட்டுரை ஒன்று கடந்த 04.08.2019 அன்று தினக்குரல் பத்திரிக்கையில் பிரசுரமானது.

குறித்த கட்டுரையில்  மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் வீட்டு திட்டங்கள் குறித்தும் அதில் இடம்பெறும் முறைக்கேடுகள் குறித்தும் பிரசுரமாகியிருந்தது.

இந்நிலையில் குறித்த கட்டுரையுடன்  தொடர்புடையோர் தொலை பேசியூடாக கட்டுரையை எழுதிய ஊடகவியலாளர் மீது அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து தற்போது சுதந்திர ஊடக இயக்கம் குறித்த செயலை  வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்து அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.