சைவத் தமிழ் மக்களின் வாழ்விடங்களில் போலியான வரலாற்றை உருவாக்கி விகாரைகள் அமைத்தலை நிறுத்துதல், வடகிழக்கில் புதிதாக ஆயிரம் விகாரைகள் அமைக்கும் அரசின் திட்டம் நடைமுறைப்படுத்துவதை தடை செய்தல் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை இந்து அமைப்புக்களின் ஒன்றியம் முன்வைத்துள்ளது.
அந்த அமைப்பின் ஏற்பாட்டில் நல்லை ஆதீனம் முன்பாக நேற்றுக் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் முடிவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வரலாற்றுக் காலம் முதல் அமைக்கப்பட்டிருந்த இந்து ஆலயங்கள் அழிக்கப்படுவதும் ஆலய வளைவு உடைக்கப்படுவதும், பௌத்தர்கள் வாழ்ந்திராத பிரதேசங்களில் விகாரைகள் அமைக்கப்டுவதும் இலங்கை வாழ் இந்துக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருப்பதை நன்கு உணர்ந்த நிலையில் இந்து அமைப்புக்களின் ஒன்றியமானது அமைதி வழியில் மேற்படி அதர்ம செயல்களைக் கண்டித்தும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் அகிம்மை முறையில் கவனவீர்ப்பை இந்து சமயப் பேரவையுடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.
இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்திய தலைமை அமைச்சர் மற்றும் இலங்கையின் இந்து சமய விவகார அமைச்சர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு வந்து உரிய நடவடிக்கையை மேற்கொண்டு இந்துக்கள் அனைவரும் அச்சமின்றி சமய வழிபாடுகளில் ஈடுபடுவதை உறுதிப்படுத்தி உதவுமாறு தயவாக வேண்டுகின்றோம்.
இலங்கை வேந்தன் இராவணண் காலம் முதல் இந்துக்களால் பாதுகாக்கப்பட்டு பாராமரிக்கப்பட்டுவந்த கன்னியா வெந்நீருற்றுப் பகுதியையும் அங்கிருந்த ஆலயங்களையும் தடையேதுமின்றி மீளவும் அமைத்து வழிபாடு செய்பவதற்கும் இந்தப் பகுதி சைவத் தமிழரின் நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து இருப்பதையும் உறுதிப்படுத்தல். இந்தப் பிரதேசத்துக்கு அண்மையில் பௌத்த விகாரைகள் அமைத்தலைத் தடுத்தல். வவுனியா வெடுக்குநாறி சிவன் ஆலயத்துக்குச் செல்லும் பாதையூடாக தடையின்றி போக்குவரத்துச் செய்வது, அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்குச் செல்வதற்கான ஏணிப் படிகளை அமைக்க பொலிஸாரும் தொல்லியல் திணைக்களமும் தடை ஏற்படுத்தாது இருத்தல்.
மதநல்லிணக்கத்தைச் சிதைக்கும் நோக்கில் இடித்து அழிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீச்சர ஆலய வளைவை முன்பிருந்த இடத்தில் சமாதானமான முறையில் மீள அமைப்பதற்கு ஏற்பாடு செய்து மத நல்லிணக்கத்தைப் பேணுதல்.
தொல்லியில் திணைக்களம் நடுநிலைமை தவறி பக்கச்சார்பாகச் செயற்பட்டு பௌத்த வரலாற்றுச் சின்னங்கள் காணப்படாத இடங்களில் விகாரைகள் அமைப்பதை ஊக்கப்படுத்தி வருவதை வன்மையாகக் கண்டிப்பதோடு அத்திணைக்களத்துக்கு தகுதியான சைவத் தமிழர் களையும் நியமித்து குறித்த திணைக்களம் பக்கச்சார்பின்றி செயற்படு வதை உறுதிப்படுத்துதல்.
மதமாற்றங்களைத் தடை செய்தல்.
முல்லைத்தீவு செம்மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு செய்யாதிருத்தல்.
நீராவியடிப்பிள்ளையார் ஆலயப் பகுதியில் பௌத்த மத வழிபாட்டுத் தலங்கள் இருந்தமைக்கான ஆதாரமே இல்லை என்று தொல் பொருள் திணைக்களமே கூறியுள்ள நிலையில் அங்கு விகாரைகள் அமைத்தலைத் தடை செய்யதல்.
வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை நிறுத்துதல்.
மேலே விவரிக்கப்பட்ட எமது நியாயமான கோரிக்கைகளை சாதகமாகப் பரிசீலித்து அவற்றைச் செயற்படுத்துவதற்குரிய பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து மத நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத் தித் தருமாறு அன்புடன் வேண்டுகின்றோம், என்றுள்ளது.