ரஷியாவில் பயங்கர காட்டுத்தீ : அவசரநிலை பிரகடனம்

ரஷியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ காரணமாக பல்லாயிரக்கனக்கான ஏக்கர் நிலப்பரப்புகளில் உள்ள மரங்கள் தீக்கிரையாகின.

ரஷிய நாட்டின் சைபீரியா மாகாணத்தில் கிராஸ்னோயார்க் பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது.
தொடர்ந்து பரவி வரும் இந்த தீயால் 6.7 மில்லியன் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு நாசமாகி உள்ளது. அங்கு நிலவி வரும் வறண்ட வானிலை மற்றும் வேகமாக வீசி வரும் காற்றால் இந்த காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
இதனால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு அந்த பகுதிகளில் வாழும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். மேலும் காட்டுத்தீ பரவி வரும் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த உ‌ஷார் நிலையில் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
காட்டுத்தீயை அணைக்க நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் 20 விமானங்கள் மூலம் தண்ணீரை கொட்டி தீயை கட்டுப்படுத்த ரஷிய பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.