சினிமாவில் நடிக்க பெண்கள் பயப்பட தேவை இல்லை- அனுஷ்கா

சினிமா பாதுகாப்பான தொழிலாக இருக்கிறது. பெண்கள் தாராளமாக நடிக்க வரலாம். பயப்பட தேவை இல்லை என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்.

நடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:-“சினிமாவில் பெண்கள் நடிக்க வருவது பற்றி சிலர் ஒரு மாதிரி பேசுகிறார்கள். அவர்களின் எண்ணமும் கருத்தும் என்னை ஆச்சரியப்படுத்துவதாக இருக்கிறது. அவர்கள் நினைப்பது போல் சினிமா மோசம் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பான தொழிலாகவே இருக்கிறது. எனவே பெண்கள் நடிக்க வருவதற்கு பயப்பட வேண்டாம். நான் நடிகையாக அறிமுகமான ஆரம்ப கால கட்டத்தில் சினிமா பற்றி எதுவும் தெரியாது. பயந்தேன். அழுதும் இருக்கிறேன். சினிமாவை விட்டு ஓடிவிடலாம் என்றும் நினைத்து இருக்கிறேன்.
அதற்கு காரணம் சினிமாவில் இருப்பவர்களோ அல்லது சினிமா சூழ்நிலையோ கிடையாது. முறையாக எதுவும் கற்றுக்கொள்ளாமல் நான் வந்ததுதான். நடிப்பு பற்றி எதுவும் புரிந்து கொள்ளமுடியாமல் இருந்தேன். கற்றுக்கொண்டதும் சகஜமாகி விட்டேன். சினிமாவை பற்றி மற்றவர்கள் கருத்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். என்னை பொருத்தவரை பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான தொழில் சினிமா என்று சத்தமாக சொல்வேன்.
நான் பெரிய நடிகையாகி விட்டதால் இப்படி சொல்கிறேன். புதுமுக நடிகையாக இருந்தால் சொல்லி இருக்க மாட்டேன் என்று நினைக்கலாம். நானும் புதுமுக நடிகையாக இருந்துதான் பெரிய நடிகையாக உயர்ந்தேன்.
புதுமுகமாக இருந்த போது என்னை யாரும் கஷ்டப்படுத்தவில்லை. நல்லது கெட்டது எல்லா இடங்களிலும் இருக்கிறது. நாம் சரியாக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. நல்லது கெட்டதுக்கு அவரவர் எடுக்கும் முடிவுகளே காரணமாகின்றன. என் வாழ்க்கையை சினிமா இல்லாமல் நினைத்து பார்க்க முடியவில்லை. எதிர்காலத்தில் எனக்கு குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு சினிமா தொழிலில் ஈடுபட ஆசை வந்தால் மறுக்க மாட்டேன். சினிமாவில் அவர்களை சந்தோஷமாக அறிமுகப்படுத்துவேன்.” இவ்வாறு அனுஷ்கா கூறினார்.