உண்ணாவிரதம் இருக்கும் கைதி தொடர்பில் மனோவை தலையிடுமாறும் கோரிக்கை!

மகசீன் சிறைச்சாலையில்  உள்ள கைதியொருவர் கடந்த 16 ஆம் திகதி முதல் நீரின்றி உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். இவரது உடல் நிலை மிகவும்  மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவிக்கப்படுகினறது.

முன்னாள் திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவரான 62 வயதுடைய கனகசபை தேவதாசன் எனபரே இவ்வாறு நீர் கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்.

கோட்டை புகையிரத நிலையம் குண்டுவெடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு வழக்கில் ஆயுள் தண்டனையும், மற்றொரு வழக்கில் 20 வருடங்கள் கடுழீய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

குறித்த இரு வழக்குகளிலும் இவரே தனக்காக வாதாடியிருந்தார். தனது வழக்கில் சாட்சியங்களையும்,  ஆதாரங்களையும் முன்வைப்பதற்காக தனக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பில்  அவர் தனது கோரிக்களை  எழுத்து மூலம் அதிகாரிகளுக்கு அறிவித்தும் அதற்கான பதில்கள் இதுவரை கிடைக்காத நிலையில் தான் நீதி அமைச்சுக்கு அனுப்பிய கடிதங்கள் சிறை அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டதா  என்பது தொடர்பிலும் தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கும் கைதியின் உடல் நிலை மிகவும் மோசடைந்துள்ளது.

இதுவரை அவரை  வைத்தியர் மட்டுமே சென்று பார்வையிட்டுள்ளார். அதிகாரிகளோ , அரசியல்வாதிகளோ சென்று பார்வையிடவில்லை. எனவே அவர் சார்பில் மகசீன் சிறையில் உள்ள ஏனைய அரசியல் கைதிகள் அமைச்சர் மனோ கணேசனிடம்  தங்களது விடயத்தில் தலையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.