மட்டு. பல்கலை.யினை ஹிஸ்புல்லாவிடம் கையளிக்க முயற்சித்தால் எதிர்ப்போம் !

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் சட்டத்துக்கு முரணான நிறுவனமாகும். மீண்டும் இந்த நிறுவனத்தை முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவுக்கு கையளிக்க எவராவது முயற்சிப்பார்களாக இருந்தால் அதனை தான் எதிர்ப்பதாகவும் இந்த பல்கலைக்கழகம் தொடர்பில் கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார்  பாராளுமன்ற மேற்பார்வைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைதொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அந்த குழுவின் தலைவர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இன்று   இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த பல்கழைலகழகம் தொடர்பாக விளக்கமளித்த  அவர் மேலும் கூறியதாவது ;

கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார்  பாராளுமன்ற மேற்பார்வைக்குழு மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகம் தொடர்பான  இறுதி அறிக்கையை கடந்த மாதம் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

இந்நிலையில் இந்த பல்கலைகழகம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தை முன்னெடுப்பதற்கு அனுமதியும் கோரியுள்ளோம். ஆகவே அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடர்களின் போது இது தொடர்பான விவாதத்தை  முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என்றும்  அவர் குறிப்பிட்டார்.