வங்காளதேசத்தின் கடைசி சர்வாதிகாரி எர்ஷாத் மரணம்!

வங்காளதேசம் நாட்டில் ராணுவ ஆட்சியை நடத்திய கடைசி சர்வாதிகாரி ஹுசைன் முகம்மது எர்ஷாத்(91) உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.

கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட பகுதியில் வசித்த மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு இந்தியா துணை நின்றது. பாகிஸ்தானுடன் இந்திய ராணுவம் போர் நடத்தி கிழக்கு பாகிஸ்தானை வங்காளதேசம் என்ற தனிநாடாக இந்தியா மலரச் செய்தது.

அங்கு அதிபர் அப்துஸ் சர்தார் தலைமையில் நடைபெற்றுவந்த ஜனநாயக முறையிலான ஆட்சியை 1982-ம் ஆண்டில் ராணுவ புரட்சியின் மூலம் கவிழ்த்த ஹுசைன் முகம்மது எர்ஷாத், அந்நாட்டின் சர்வாதிகாரியாக மாறி, ஜனநாயகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 1990-ம் ஆண்டுவரை 8 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார்.
பின்னர், ஏற்பட்ட மக்கள் புரட்சியின் விளைவாக ஆட்சியை விட்டு அகற்றப்பட்டார். எர்ஷாத் ஆட்சிக் காலத்தின்போதுதான் வங்காளதேசம் நாட்டின் தேசிய மதமாக இஸ்லாம் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், பல்வேறு குற்றச்சாட்டுகளின்கிழ் சிறையில் அடைக்கப்பட்ட எர்ஷாத், ஜாட்டியா என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி மக்களின் ஆதரவை பெற்றார். வழக்குகளில் இருந்து விடுதலையான பின்னர் தேர்தல்களில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பலமுறை பதவி வகித்தார்.
வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தின்போது, பிரிக்கப்படாத இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்திற்குட்பட்ட கூச்பேஹார்  மாவட்டத்தில் பிறந்த எர்ஷாத்தின் குடும்பம் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து சென்றது.
அப்போது வங்காளதேசம் என்ற தனிநாடு உருவாவதற்கு முன்னர் ஒன்றுபட்டிருந்த பாகிஸ்தானுக்கு உட்பட்ட டாக்கா பல்கலைக்கழகத்தில் பயின்ற எர்ஷாத் பின்னர், பாகிஸ்தான் ராணுவத்தில் இணைந்தார். வங்காளதேசம் என்ற தனிநாடு உதயமான பின்னர் ராணுவ உயரதிகாரியாக பதவி வகித்து பிரட்சியின் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டார்.
சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த எர்ஷாத், டாக்கா நகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ஜூன் 28-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.45 மணியளவில் தனது 91-வது வயதில் ஹுசைன் முகம்மது எர்ஷாத் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு வங்காளதேசம் அதிபர் அப்துல் ஹமீத், பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அந்நாட்டின் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ‘வங்காளதேசத்தின் முன்னாள் அதிபர் எர்ஷாத் இன்று காலமான செய்தி அறிந்து ஆழ்ந்த கவலை அடைந்துள்ளேன். வங்காளதேசத்துக்கு ஆற்றிய பொதுச்சேவைக்காகவும் இந்தியாவுடனான நட்புறவுகளை மிகவும் சிறப்பாக பேணிவந்தமைக்காகவும் அவர் நீண்டகாலம் நினைவுகூரப்படுவார்’ஏன குறிப்பிட்டுள்ளார்.