அவுஸ்ரேலிய படகு விபத்தில் மூவர் உயிரிழப்பு!

அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

சிட்னிக்கு வடக்கே 160 கி.மீ (100 மைல்) தொலைவிலுள்ள நியூகேஸில் இன்று(வியாழக்கிழமை) இந்த படகு விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்த அவசர மீட்பு படையினர் இருவரை காப்பாற்றியுள்ளனர்.

40 வயதான ஆண்ணொருவரும், 16 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், குறித்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் குறித்த படகு விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.