அவுஸ்திரேலியாலில் இருந்து சிறிலங்கா சென்ற தம்பதி கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கணவன், மனைவி தம்பதி ஒன்று நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவில் இருந்து நேற்றிரவு 11 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்த தம்பதியை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

46 தோட்டாக்களை வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கம்பஹா நீதவான் நீதிமன்றம் இவர்களுக்கு எதிரான பிடியாணை பிறப்பித்திருந்தது.

அத்துடன் கைது செய்யப்பட்ட நபர், கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி நெதகம – கொட்டுகொட பிரதேசத்தில் பஸ் சமி என்ற பாலசூரிய லேக்கம்லாகே பிரசாத் நிரோஷன் பாலசூரிய என்ற நபரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்தவர் எனவும் காவல் துறை ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.