கூட்டமைப்பின் வழமையான கையாலாகாத தன்மை!

கல்முனை பிரதேச செயலக விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். மிகவும் இலகுவான முறையில் தீர்த்து வைத்திருக்க வேண்டிய கல்முனைப் பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல் விடயம், இன்று இவ்வளவு தூரத்துக்கு வளர்ந்து இனங்களுக்கிடையேயான முறுகலை ஏற்படுத்தும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இதற்கான முழுப் பொறுப்பையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;

கடந்த மாகாண சபையில் பதினொரு உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆறு உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்தபோது, தமிழ்த் தலைமைகள், அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையின் உண்மைத் தன்மையை தெளிவுபடுத்தி, பேரம்பேசி பிரதேச செயலகத்தின் தரத்தை உயர்த்தி இருக்கலாம். அல்லது நல்லாட்சி அரசில் எதிர்க்கட்சி பதவியைப் பெற்றுக்கொண்ட போதாவது, இது விடயமாக பேரம் பேசி இருக்கலாம். எதுவுமே செய்யாமல் கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் எதைப் பற்றியும் சிந்திக்காமல், பேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்டு, இப்போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழமையான கையாலாகாத தன்மையையே, தொடர்ந்தும் காட்டுகின்றது.

கல்முனைப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதால் இஸ்லாமிய மக்க ளுக்கோ, அவர்களது நிலத்துக்கோ எதுவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இந்த விடயத்தில், முஸ்லிம் தலைமைகள் பொறுப்புடனும் நிதானத்துடனும் செயற்பட்டு இவ்விடயத்துக்கு பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி வினயமாகக் கேட் டுக் கொள்கின்றது.

சிறுபான்மை இனங்கள் நமக்குள் நாமே விட்டுக்கொடுப்பதற்கு முரண்டு பிடித்தால், எவ்வாறு பெரும்பான்மையிடம் நாம் அதிகாரப் பரவலாக்கலை எதிர்பார்க்க முடியும்? தமிழர் விடுதலைக் கூட்டணி அன்று தொட்டு இன்றுவரை அனைத்து இன மக்களும் சமாதானத்துடனும் ஐக்கியமாகவும் வாழ வேண்டும் என்றே வலியுறுத்தி வருகின்றது.

இதன் அடிப்படையில்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியும் கல்முனை மாநகர சபையில் ஆதரவு கொடுத்தது.

ஆனால் பிரதேச செயலகத்தில் அமைந் திருந்த விநாயகர் கோவில் விடயத்தில் எவருடனும் கலந்தாலோசிக்காமல் மாநகர முதல்வர், நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, இந்துக்களின் மனதை நோகடிக்கும் செயல் என்று தெரிந்திருந்தும் தொடர்ந்தும் இன விரிசலுக்கான நிலைமையை ஏற்ப டுத்தினார். இந்த விடயத்தில் எமது கட்சியைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு நாம் எவ்வளவோ எடுத்துக் கூறியும், பிரதி முதல்வர் என்ற பதவி மோகத்துக்கு ஆளாகி உறுப்பினர் காத்தமுத்து கணே சனும் மற்றும் உறுப்பினர் ஜெ. சுமித் திராவும் விலை போய் விட்டார்கள்.

இருந்தும் நாம் அவர்கள் மீது உடன் நடவடிக்கை எடுத்து, இனங் களுக்கிடையேயான முரண்பாடு களை வளர்த்து, அதில் அரசியல் ஆதா யம் தேட முற்படாமல், வழக்கை வாபஸ் வாங்கு வதற்கு மாநகர முதல்வருக்கு அழுத்தம் கொடுக்குமாறு எமது உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டோம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாமல் அதற்கான பிராயச்சித்தமும் தேடாமல், தொடர்ந்தும் தங்கள் போக்கிலேயே நடந்து கொண்டார்கள்.

அது மட்டுமல்லாமல் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராகவும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், இனங்களுக்கிடையே விரிசலை ஏற்ப டுத்தும் நோக்கத்துடனும் தொடர்ந்தும் செயற்பட்டும் வந்தார்கள். இதன் காரண மாக, அவர்களை நாம் கட்சியி லிருந்து நீக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள விரும்பத் தகாத சூழ்நிலையை அனைவரும் உணர்ந்து, விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டு, இந்த விடயத்தில் அரசியல் ஆதாயம் தேடி மக்களை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லாமல், நிதானமாக நடந்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றது.