அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருக்கிறேன்!

பட விழாவில் கலந்துக் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருக்கிறேன் என்று வேதனையுடன் பேசியிருக்கிறார்.

யோகிபாபு நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கூர்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பேசியதாவது:-

‘தங்கம், பிளாட்டினத்தை விட தண்ணீர் மிகவும் விலை உயர்ந்தது. தண்ணீர் பற்றாக்குறை தற்போது அதிக அளவில் உள்ளது. அதற்கு காரணம் நாம் தான். இப்போதாவது தண்ணீர் சேகரிப்பது தொடர்பாக நல்ல வி‌ஷயங்களை நாம் செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

தண்ணீரை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். சின்ன சின்ன பயன்படுத்தும் முறைகள் உள்ளன. அவற்றை அன்றாடம் நாம் பயன் படுத்தினால் போதும். நம் தட்டில் சாப்பிடுவதை விட வாழை இலையில் சாப்பிடலாம். அதனால் தண்ணீர் மிச்சமாக வாய்ப்புள்ளது.

தினமும் வெவ்வேறு ஆடைகளை பயன்படுத்தாமல் வாரத்திற்கு இரண்டு ஆடைகளை மட்டும் மாற்றி மாற்றி பயன்படுத்தினால் சலவைக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் மிச்சமாகும். நாம் அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை சேமித்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அடுத்த தலைமுறையினருக்கு பணம், சொத்து கொடுக்கலாம்.

ஆனால் அதை விட முக்கியம் தண்ணீர். அதனால் அவர்களுக்கு தண்ணீர் சேமித்து கொடுக்க வேண்டும். நான் குளிப்பதற்கு ஒரு அரை வாளி தண்ணீருக்காக அரை மணி நேரமாக வீட்டில் காத்து கொண்டு இருந்தேன்’. இவ்வாறு அவர் கூறினார்.