2-வது திருமணம் செய்து கொண்டது ஏன்? – பிரகாஷ்ராஜ்

2-வது திருமணம் செய்து கொண்டது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கமளித்துள்ளார். தந்தையர் தினத்தையொட்டு நடிகர் பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“சொந்த வாழ்க்கையில் தந்தையின் பங்கு முக்கியம். எனக்கு 4 குழந்தைகள். அதில் ஒரு குழந்தை இறந்து விட்டது. குழந்தைகளுக்கு வெளி உலகம் நிறைய கற்று கொடுக்கிறது. அவர்களை இப்படித்தான் வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. சுதந்திரம் கொடுத்தால் கெட்டுப்போவார்கள் என்ற பயம் பல பெற்றோர்களுக்கு இருக்கிறது.

குழந்தைகள் மீது நம்பிக்கை இல்லாதபோது பயம் வருகிறது. குழந்தைகளை பொறுப்பாக வளர்த்து அவர்கள் ஆசைகளை கவுரவித்தால் கெட்டுப்போக மாட்டார்கள். குழந்தைகள் பெற்றோர்களை பார்த்து வளர்கிறார்கள். எனவே அவர்களுக்கு ஒரு புத்தகம் மாதிரி நாம் இருக்க வேண்டும்.

நான் மீண்டும் திருமணம் செய்தபோது எனது பெரிய மகளுக்கு 14 வயது. என் அப்பா, தங்கை, மகள் 3 பேரையும் உட்கார வைத்து போனி வர்மாவை அழைத்து வந்து இவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றதும் எனது மகள் சம்மதம் சொன்னாள். ஆனால் எனது அம்மா அழுதுவிட்டார்.

என் குடும்பத்தில் நிறைய பெண்கள் உள்ளனர். எல்லோருக்கும் மீண்டும் திருமணம் செய்து கொள்வது பற்றி விளக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. என் முதல் மனைவி லதாவும் இரண்டாவது மனைவி போனியும் குழந்தைகள் விஷயத்தில் தோழிகளாகி விட்டனர். லதாவுக்கு நான் மட்டும்தான் விவாகரத்து கொடுத்தேன். எனது குழந்தைகளும் அம்மாவும் விவாகரத்து கொடுக்கவில்லை.

லதாவுக்கும் எனக்கும் பிரச்சினை இருந்தது. பொய்களுடன் சேர்ந்து வாழக்கூடாது என்று பிரிந்து விட்டோம். நான் நேர்மையாக இருக்கிறேன். லதாவும் நானும் வெளிப்படையாக பேசி பிரிந்தோம். இதையெல்லாம் பார்த்தே எனது குழந்தைகள் வளர்ந்தனர். குழந்தைகளுடன் நிறைய மனம் விட்டு பேசுவது அவர்களை நம்முடன் நெருங்க வைக்கும்.” இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.