சிறீலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவையாம்

சிறீலங்காவின் தேசிய பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவைப்படுவதாகவும் அதனை கையகப்படுத்துவதற்கு காணி அமைச்சரிடம் அனுமதியைக் கோரியுள்ளது இராணுவம்.

தற்போது இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் இந்தக் காணிகளிலேயே அந்த 1000 ஏக்கரும் அடங்கியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வலிகாமம் வடக்கில் பொதுமக்களின் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும், இராணுவத்தினரிடமிருந்த 500 ஏக்கர் காணிகளை தாம் விடுவிக்குமாறு கோரியதற்கிணங்கவே இராணுவத்தினர் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மோதல்களுக்கு முன்னர் மக்கள் அதிகளவில் வசித்த கீரிமலை, காங்கேசன்துறை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளிலுள்ள காணிகளையே இராணுவம் விடுவிக்கவுள்ளது.

முன்னதாக, இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.