தமிழர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட மணலாறு ஆமையன் குளம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீக நிலமான மணலாறு பகுதி  வெலிஒயா என பெயர் சூட்டப்பட்டு தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் பறிக்ப்பட்டு பெரும்பான்மையின மக்களுக்கு வழங்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மயமாக்கலின் செயற்பாடுகள் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன .

 

1984 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் திருகோணமலை எல்லைப்பகுதிகளிலிருந்து தமிழ்மக்கள் பெரும்பான்மையினத்திவர்களால் விரட்டியடிக்கப்பட்டு அங்கு பெரும்பான்மையினத்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

இதனை தொடர்ந்து தமிழ் மக்களின்  பூர்வீக வயல் நிலங்களும் காணிகளும் பெரும்பான்மையினத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வெலிஓயா எனும் புதிய பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டு சிங்களமயமாக்கல் தற்போது முல்லைத்தீவு செம்மலை கிராமத்தை அண்மிக்கும் அளவுக்கு பெருமெடுப்பில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது .

இந்நிலையில் தமிழ் மக்களின் பூர்வீக கிராமமும் குளமுமான  ஆமையன் குளம் என்ற குளம் கிரி இப்ப வெவ என சிங்கள பெயர் சூட்டப்பட்டு மகாவலி அபிவிருத்தி L  வலையத்திற்குள் அபகரிக்கப்பட்டு பெரும்பான்மையின மக்களுக்காக அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு சிறிலங்கா  ஜனாதிபதி  மைதிரிபால சிறீசேனாவினால் நேற்றையதினம் (8)திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் தமிழ் மக்களுக்காக அபிவிருத்தி என கூறிக்கொண்டு தமிழ் மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட எல்லைக்கிராமங்களுக்கு நேரடியாக சென்று ஜனாதிபதி அபிவிருத்தி திட்ட்ங்களை ஆரம்பித்துவைத்துள்ளமை மகாவலி ஆக்கிரமிப்பாலும் சிங்களமயமாக்கலினாலும் தொடர்ந்தது அநீதிக்குளாகிவரும் தமிழ் மக்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது .