சிறப்பு தொழுகை நடத்த ஹபீஸ் சயீத்துக்கு அனுமதி மறுப்பு!

பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத் கடாபி மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்துவதற்கு அனுமதி கேட்டபோது அரசு மறுத்து விட்டது.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் 166 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதல்களுக்கு பின்னணியாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். ஜமாத்-உத்-தவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. மேலும் அவரது பெயர் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தற்போது ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் வீட்டுக்காவலில் இருக்கிறார்.

ஹபீஸ் சயீத் கடந்த சில வருடங்களாக ரம்ஜான் சிறப்பு தொழுகையை லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் தலைமையேற்று நடத்தி வந்தார். பாகிஸ்தான் அரசு அவருக்கு எந்த தடையும் விதிக்கவில்லை.

ஆனால் இந்த ஆண்டு ஹபீஸ் சயீத் கடாபி மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்துவதற்கு அரசிடம் அனுமதி கேட்டபோது அரசு மறுத்து விட்டது. தடையை மீறி தொழுகை நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இதனால் சயீத் சிறப்பு தொழுகையில் பங்கேற்கவில்லை. கடந்த காலங்களில் அவர் சிறப்பு தொழுகையில் கலந்து கொள்ளும் போது திரளான மக்கள் மத்தியில் தனது கருத்துக்களையும் பரப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.