யாழ். போதனா வைத்தியசாலையின் நிரந்தர பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி !

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் த. சத்தியமூர்த்தி நிரந்தரமாக (இடமாற்றங்களுக்கு உட்படாத இறுதி நிலைப் பதவியில்) சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் அவர் ஓய்வூதியம் பெறும்வரை யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்ற முடியும்.

மார்ச் 27 ஆம் திகதிய அமைச்சரவை அனுமதியுடன் இலங்கையில் உள்ள ஒன்பது வைத்தியசாலைகளுக்கு இவ்வாறு நிரந்தரப் (இடமாற்றம் அற்ற) பணிப்பாளர் பதவிக்கு சிரேஸ்ட வைத்திய நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு சீமாட்டி ரிச்வே சிறுவர் வைத்தியசாலை, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, யாழ் போதனா வைத்தியசாலை, அநுராதபுரம் போதனா வைத்தியசாலை, மட்டகளப்பு போதனா வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை, பேராதனை போதனா வைத்தியசாலைகளின் பணிப்பாளர் பதவிகளை இறுதி நிலைப் பதவிகளாக (End post) மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதில் கொழும்பு வடக்கு, தெற்கு, யாழ்ப்பாணம், கண்டி, பேராதனை வைத்தியசாலைகளில் தற்போதுள்ள பணிப்பாளர்கள் நிரந்தரமாகவே கடமையாற்றுவதோடு ஏனைய வைத்தியசாலைகளுக்கு விரைவில் புதிதாக நிரந்தரப் (இடமாற்றங்களுக்கு உட்படாத ) பணிப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.