அனுஷ்கா வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம்

அனுஷ்கா வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார்.

அனுஷ்கா சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. ஆரம்பத்தில் நடித்த படங்களில் அவருக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களே அமைந்தன. காதல் காட்சிகளிலும் டூயட் காட்சிகளிலும் மட்டுமே பயன்படுத்தினர். ஆனால் அருந்ததி படம் அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அனுஷ்காவை மையப்படுத்திய அந்த படம் அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியது. மந்திரவாதியிடம் ஆக்ரோஷமாக மோதும் காட்சிகளில் மிரளவைத்தார்.

அதன்பிறகு முன்னணி டைரக்டர்கள் பார்வை அவர் பக்கம் திரும்பியது. அனுஷ்காவை மனதில் வைத்து கதைகள் தயார் செய்தார்கள். வானம் படத்தில் மற்ற கதாநாயகிகள் நடிக்க தயங்கும் விலைமாது கதாபாத்திரத்தில் துணிச்சலாக வந்தார். இரண்டாம் உலகம் படத்தில் வாள் சண்டையுடன் அதிரடி கதாபாத்திரத்தில் நடித்தார். பாகுபலி படத்தில் அடிமை சங்கிலியில் பிணைக்கப்பட்ட ராணி வேடத்தில் வந்தார்.

ருத்ரமாதேவி படத்திலும் ராணி வேடத்தில் கதாநாயகர்களுக்கு இணையாக அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இஞ்சி இடுப்பழகி படத்தில் 15 கிலோ எடை கூட்டி குண்டு பெண்ணாக வந்து ஆச்சரியப்படுத்தினார். பாக்மதி என்ற சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் தற்போது வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நாகார்ஜுனாவுடன் ஓம் நமோ வெங்கடேசாய என்ற பக்தி படத்திலும் நடித்துள்ளார்.

இதில் ஏழுமலையானின் பக்தையாக வருகிறார். இந்த படத்தில் அவரது தோற்றம் வெளியாகி உள்ளது. இது தனக்கு இன்னொரு முக்கிய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க அனுஷ்கா ஆர்வம் காட்டுகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என்றும் முடிவு செய்துள்ளார்.