அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு ஆதரவான போராட்டம் ஓயாது!

இலங்கைக்கு திருப்பி அனுப்பபடவுள்ள நிலையில் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் நடேசலிங்கம், பிரியா குடும்பத்தினருக்கு ஆதரவாக தொடர்ந்தும் போராட்டம் நடத்திவரப்படுகின்றது.

லிபரல் கூட்டணி ஆட்சிபீடமேறினாலும் தங்களது முயற்சியில் தாங்கள் சோர்ந்துவிடவில்லை என நடேசலிங்கம், பிரியா குடும்பத்தினரின் ஆதரவாளர்கள் கூறியுள்ளார்கள்.

பிரதமர் Scott Morrison, உள்துறை அமைச்சர் Peter Dutton உட்பட அரசின் முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தினரின் நாடுகடத்தலை தடுக்கக்கோரும் மின்னஞ்சல்களையும் வேண்டுகோள்களையும் தொடர்ந்தும் அனுப்பிவருவதாக ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

நாங்கள் வாக்களித்துள்ள அரசியல்வாதிகள் எங்களது குரலுக்கு செவிசாய்க்கவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை தூதரக உயர்மட்ட அதிகாரி லால் ராஜ் விக்ரமதுங்க கூறும்போது – இலங்கை அரசாங்கத்தைப்பொறுத்தவரை நடேசலிங்கம் இலங்கைக்கு திரும்பிச்செல்வதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. அவர்கள் மாத்திரமல்ல வெளிநாடுகளிலுள்ள சகல இலங்கை மக்களும் அவர்களது சொந்தநாட்டுக்கு திரும்பி வரலாம் என்பதுதான் இலங்கை அரசின் தொடர்ச்சியான கோரிக்கையும் நிலைப்பாடும் ஆகும்- என்று தெரிவித்துள்ளார்.