அவுஸ்திரேலியாவில் சிறைத்தண்டனை பெற்றுள்ள பெண் மருத்துவர் விடுதலையை விரும்பவில்லை

அவுஸ்திரேலியாவில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள இலங்கை பெண் மருத்துவர் ஒருவர் குறுகிய கால விடுதலைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

தனது கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ள இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பெண் மருத்துவர் ஒருவர், நன்னடத்தையின் அடிப்படையில் குறுகியகால விடுமுறையில் வீடு செல்ல வாய்ப்பு இருக்கின்ற போதும் அதனை அவர் நிராகரித்துள்ளார்.

குறுகிய கால விடுப்பில் தாம் சிறையில் இருந்து வெளியேறினால், நாடு கடத்தும் வகையில் குடிவரவு முகாமில் அடைத்துவிடுவார்கள் என்ற பயம் காரணமாகவே அவர், இந்த நிராகரிப்பை வெளியிட்டுள்ளார்.

கணவரின் பாலியல் துன்புறுத்தல்களை தாங்கிக்கொள்ள முடியாமல் 2014ஆம் ஆண்டு தினேந்திரா அத்துகோரள என்ற தனது கணவரை கொலை செய்ததாக சாமரி லியனகே என்ற பெண் மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதன் பின்னர் குற்றவாளியாக காணப்பட்ட அவருக்கு நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதேவேளை, தமது எதிர்காலம் தொடர்பில் நிச்சயமற்ற நிலை உள்ளமையால் விடுதலைக்கும் அவர் விண்ணப்பிக்கவில்லை என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவரின் மேன்முறையீடு மனு எதிர்வரும் நவம்பர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.