மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2019

இலங்கைத்தீவில் நீண்டகாலமாக சிங்களப் பேரினவாத சக்திகளால் இனப்படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களையும், அந்த இனவழிப்பின் உச்சமாக 2009-ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய மாபெரும் மனிதப் பேரவலத்தின்போதும் காவுகொள்ளப்பட்ட தமிழ் மக்களையும் நினைவுகூருகின்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வு, கடந்த 18-05-2019 சனிக்கிழமை மெல்பேர்ணில்; உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
 
மெல்பேர்ணில் அமையப் பெற்றுள்ள கங்கேரியன் சமூக மண்டபத்தில், மாலை 6.00 மணிக்கு செல்வி லக்சிகா தலைமையில ஆரம்பமாகிய இந்நிகழ்வில், முதல்நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனவழிப்பின்போது, தனது இரண்டு பிள்ளைகளை இழந்து, பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்திருந்த திருமதி செல்வச்சந்திரா செல்வராஜா அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்.
 
அதனைத் தொடர்ந்து,  தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ச்செயற்பாட்டாளர் திருமதி வசந்தி சேகர் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை மூத்த தமிழ்ச்செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான திரு செந்தில் செந்தில்நாதன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
 
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் இனவழிப்பின்போது காவுகொள்ளப்பட்ட மக்களை இவ்வாண்டு பத்தாவது ஆண்டாக நினைவுகூரும் முகமாக, மெல்பேர்ண் தமிழ்ச்சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு துறைசார் செயற்பாட்டாளர்கள் இளையோர்கள் என ஒருங்கிணைந்து, பத்து நினைவுச்சுடர்கள் ஏற்றிவைக்கப்பட்டன.
 
தொடர்ந்து சிங்களப் பேரினவாதப் படைகளால், இனப்படுகொலை செய்யப்பட்ட அனைத்து தமிழ்மக்கள் நினைவாக வடிவமைக்கப்பட்ட நினைவுப் பீடத்திற்கு, நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைவரும் வரிசையாக வந்து மலர்வணக்கம் செலுத்தினார்கள். மலர்வணக்கத்தை தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
 
அதனையடுத்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. அரங்க நிகழ்வில் முதலில் வணக்க நடனம் இடம்பெற்றது. வணக்க நடனமாக திருமதி மீனா இளங்குமரனின் நெறியாள்கையில் நடனாலயாப் பள்ளி மாணவிகளின் “முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்…..” என்ற பாடலுக்கான வணக்க நடனம் இடம்பெற்றது.
 
அதனைத் தொடர்ந்து நினைவுரை இடம்பெற்றது. நினைவுரையை இறுதிப்போர் நாட்களில், வன்னியில் வாழ்ந்த மாவீரர் லெப் கேணல் சதன் அவர்களின் புதல்வன் செல்வன் பவித்திரன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனது பன்னிரண்டாவது வயதில், தனது கண்ணுக்கு முன்னே மக்கள் குண்டடிபட்டு செத்து வீழ்ந்ததை கண்டு பதைபதைத்துபோனதை நினைவிற்கொண் டுவந்தார்.
 
நாலாயிரம் மக்கள் வாழுமிடத்தை பாதுகாப்பு பிரதேசம் என அறிவித்து, நான்கு இலட்சம் மக்களை ஒன்று சேரச்செய்து, திட்டமிட்டு கொல்லப்பட்டதை கண்ணீர் ஊடே நினைவுகூர்ந்தார்.
 
அடுத்து சமூக முற்போக்கு செயற்பாட்டாளரான பாஸன அபயவர்த்தன அவர்களின் ஆங்கில மொழியிலான உரையின் காணொளித் தொகுப்பு திரையிடப்பட்டது.  அவர் தனதுரையில் முள்ளிவாய்க்கால் என்பது தனியே ஒரு இடமல்ல என்றும், தமது உரிமைக்காக போராடிய ஒரு இனத்தின் உறுதிமிக்க வரலாற்றை உலகெங்கம் வாழும் அடக்கப்படும் இனங்களுக்கு வழிகாட்டியாகச் சொல்லிநிற்கும் இடம் என்றும், தமக்கு முன்னே இருந்த மிகப்பெரிய சவாலுக்கும் மத்தியில் தமது கொடியின் கீழ் அணிவகுத்து போராடிய அந்த இயக்கத்தின் தலைவரும், மாவீரர்களும் வரலாற்றில் என்றும் போற்றப்படுவார்கள் என்றார்.
 
அடுத்து முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தின்போது காயமடைந்தவர்களுக்கான சிகிச்சைகள் அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் மேற்கொள்ளப்பட்டதை நினைவூட்டும் வகையிலான அரங்காற்றுகை நிகழ்வு கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டது.
 
அடுத்து தாயகத்தில் நிலவிடுவிப்பிற்காக மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டங்கள், அந்த மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக “தசாப்தமும் நாங்களும்” என்ற காணொளித் தொகுப்பு திரையிடப்பட்டது.
 
இறுதியாக சமூக அறிவித்தல்களோடு தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு இரவு 8.00 மணியளவில் தமிழர் இனவழிப்பு நினைவு நாள்- 2019 நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.
 
இந்நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்கால் அவலத்தை பிரதிபலிக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டதுடன், தமிழக ஓவியர் புகழேந்தி அவர்களின் “போரின் முகங்கள்” (Faces of War) என்ற ஓவியபுத்தகமும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


|