ஈழ பின்னணியில் உருவாகி `யு’ சான்றிதழ் பெற்ற முதல் தமிழ்ப் படம்!

ரஞ்சித் ஜோசஃப் இயக்கத்தில் ஈழ பின்னணியில் உருவாகி `யு’ சான்றிதழ் பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை `சினம் கொள்’ படத்திற்கு கிடைத்துள்ளது.

கனடாவில் பிறந்து வளர்ந்த ரஞ்சித் ஜோசஃப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `சினம் கொள்’. இலங்கையில் போருக்குப் பிறகான தசாப்தத்தில் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பேசும் படமாக இது உருவாகி இருக்கிறது.
6 வருடங்கள் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் ஆண்டவன் கட்டளை புகழ் அரவிந்தன், அவரது வீடு சிறிலங்கா  ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதை காண்கிறார். மேலும் அவரது குடும்பத்தினர் காணாமல் போயிருக்கிறார்கள். அதன் பின்னணில் நடப்பதை மையப்படுத்தி கதை நகர்கிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழர்கள் எதிர்கொள்ளும் சில கடினமான, யதார்த்தமான விஷயங்களையும் பேசியிருப்பதாக இயக்குனர் ரஞ்சித் ஜோசஃப் தெரிவித்தார்.
இந்த படத்தை பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்திற்கு `யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். பொதுவாகவே ஈழ பின்னணியில் உருவாகும் படங்களில் போர், இரத்தம் மற்றும் அழுத்தமான வசனங்கள் இடம்பெற்றிருக்கும். இதனாலேயே படத்திற்கு தணிக்கையில் யு சான்றிதழ் கிடைப்பதில்லை. இந்த நிலையில், ஈழ பின்னணியில் உருவாகி `யு’ சான்றிதழை பெற்ற முதல் தமிழ்ப்படம் என்ற பெருமை சினம் கொள் படத்திற்கு கிடைத்துள்ளது.
  யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு போன்ற இடங்களில் படம்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பா, கனடா மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் வாழும் இலங்கை தமிழர்கள் இந்த படத்துக்கு நிதி அளித்துள்ளனர். தேசிய விருதுக்கான பரிந்துரைக்காக அனுப்பப்பட்டுள்ள இந்த படம் ஜூலை மாதம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.