தரையிறங்கும் போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!

மியான்மரில் 89 பேரும் சென்ற விமானத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. எனினும், விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மியான்மர் ஏர்லைன்சுக்குச் சொந்தமான யுபி-103 விமானம், அந்த நாட்டு சுற்றுலா நகரமான மாண்டலேவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் காலை 9 மணிக்கு (உள்ளூர் நேரம்) தரையிறங்க முயன்றது. அந்த விமானத்தில் 7 பணியாளர்கள் உள்பட 89 பேர் இருந்தனர்.

அப்போது, அந்த விமானத்தின் முன் பக்க சக்கரங்கள் விரிய மறுத்தன. அதைத் தொடர்ந்து, உடனடியாக பின்பக்க சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி அந்த விமானத்தை விமானி தரையிறக்கினார். இதனால், விமானத்தின் முன்பகுதி தரையில் உராய்ந்தவாறு அந்த விமானம் தரையிறங்கி, காண்பவர்களை பதறவைத்தது.
எனினும், இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மியான்மரில் ஒரு வார கால இடைவெளிக்குள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது இது 2-வது முறையாகும்.