ரஷ்யாவில் விமானம் தீப்பற்றி எரிந்து விபத்து – 41 பேர் பலி!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி அதில் பயணம் செய்த 41 பயணிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து முர்மன்ஸ்க் கிளம்பிய சுகோய் சூப்பர்ஜெட் 100 விமானம் அவசரமாக தரையிறங்கும் போது ஏற்பட்ட தீவிபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 41 பேர் பலியாகினர்.
இந்திய நேரப்படி காலை 3 மணியளவில் கிளம்பிய சூப்பர்ஜெட் விமானத்தில் 78 பயணிகள் மற்றும் 5 விமான பணியாளர்கள் இடம்பெற்றிருந்தனர். மாஸ்கோவின் ஷெர்மெட்யெவோ விமான நிலையத்தில் இருந்து விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு விமான கட்டுப்பாட்டு அறையின் உதவியோடு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தரையிறங்கி விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து விமானத்தின் அவசர வழி மூலமாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர். எனினும் தீ வேகமாக பரவத் தொடங்கியதால், விமானத்தில் பயணம் செய்தவர்களில் 2 குழந்தைகள் உட்பட 41 பேர் பலியானதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த விபத்து குறித்து விசாரித்து வருவதாக ரஷ்ய விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.