அவுஸ்திரேலியாவில் மூன்று கண்ணுடன் சிக்கிய அதிசய பாம்பு!

அவுஸ்திரேலியாவில் மூன்று கண் கொண்ட பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதன் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலியாவின் Humpty Doo பகுதியில் இருக்கும் Arnhem தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் Monty என்ற பெயர் கொண்ட பாம்பை Northern Territory Parks and Wildlife அதிகாரிகள் கண்டுள்ளனர்.

அந்த பாம்பிற்கு மூன்று கண்கள் இருந்ததாகவும், சுமார் 40 செ.மீற்றர் நீளம் இருந்ததாகவும், இளம் பாம்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாம்பை எக்ஸ்-ரே எடுத்து பார்த்த போது, ஒரு மண்டை ஓடு மற்றும் ஒரு தலை மட்டுமே இருந்துள்ளது. ஆனால் கண் மட்டும் மூன்று இருந்ததாக கூறப்படுகின்றது.

மேலும் இது குறித்து Northern Territory Parks and Wildlife கூறும் போது, அப்படி ஒரு பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது உண்மை தான், இது ஒரு இயற்கையான நிகழ்வு என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் இந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதன் பின் மூன்று வாரங்களில் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று கண்கள் இருந்ததால், அதனால் சரியாக சாப்பிட முடியவில்லை, அதன் காரணமாகவே இறந்ததாக கூறப்படுகிறது.

பாம்பின் புகைப்படம் சமூகவலைத்தலங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட சில நிமிடங்களிலே 13,000 ஷேர் செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் ஊரும் வகை இனங்கள் இது போன்று கண்டுபிடிப்பது முதல் முறையல்ல, இதற்கு முன் நியூ சவுத் வேல்சில் இரண்டு தலை கொண்ட காட்டு பல்லி கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.