பொன்னியின் செல்வனுக்காக ஜியோவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மணிரத்னம்!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் கதையில் பிரபலங்கள் இணைந்திருக்கும் நிலையில் இந்த படத்தை தயாரிக்க ஜியோ ஸ்டூடியோசுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.

அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.
பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இரண்டு பாகங்களாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். தற்போது பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் தேர்வாகி உள்ளார். மோகன்பாபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
சுமார் ரூ.800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை லைகா புரொக்ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இந்த படத்தை தயாரிப்பது குறித்து மணிரத்னம் ஜியோ ஸ்டூடியோசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முதற்கட்ட பணிகள் வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படம் தயாராகிறது.