சஹ்ரானின் ஊடக பிரதானி காத்தான்குடியில் கைது !

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவரான சஹ்ரானின் ஊடக பிரிவின் பிரதானியாக செயற்பட்டு வந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் காத்தான்குடியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடியைச் சேர்ந்த  38 வயதுடைய ஒருவரேயே நேற்ற கைது செய்து சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைத்துள்ளதாக காவல் துறை  உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

மட்டு. மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிணையடுத்து சம்பவதினமான நேற்று செவ்வாய்கிழமை மாலை காவல் துறையினர்  முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் புதிய காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய மொஹமட் மன்சூர் மொஹமட் பைரூஸ் என்பவர் ஆவார்.

குறித்த நபர் மருந்தகமொன்றில் கடமையாற்றி வந்துள்ளதுடன் சஹ்ரானின் ஊடக பிரிவின் பிரதானியாக செயற்பட்டு வந்தவர் என  காவல் துறையின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சி.ஐ.டி.யில் ஒப்படைக்கப்பட்ட அவரிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.