12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு ஆயுள்தண்டனை!

12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு ஆயுள்தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

அமெரிக்கவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் டேவிட் ஆலன் டர்பின் (வயது57). இவரது மனைவி லூயிஸ் அன்னா டர்பின் (50). இவர்களுக்கு 12 குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் பிறந்ததில் இருந்து வீட்டுக்குள் அடைத்து சிறை வைத்து கொடுமைப்படுத்தினர். அவர்களை சங்கிலியால் கட்டி வைத்து கொடுமைப்படுத்தினர். இவ்வாறு 3 முதல் 30 வயது வரையிலான தங்களது குழந்தைகளை சித்ரவதை படுத்தி வந்தனர்.

இதற்கிடையே ஒரு பெண் குழந்தை வீட்டின் ஜன்னல் வழியாக ஏறிக்குதித்து வெளியே தப்பி வந்து போலீசில் புகார் செய்தாள். அதைத் தொடர்ந்து போலீசார் வீட்டுக்கு சென்று சிறை வைக்கப்பட்டிருந்த 12 குழந்தைகளையும் மீட்டனர்.

வீட்டில் அடைத்து வைத்திருந்த குழந்தையின் பெற்றோர் டேவிட் ஆலன் டர்பின், லூயிஸ் அன்னா டர்பின் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. சிறை தண்டனை அனுபவித்து 25 ஆண்டுகளுக்கு பிறகு தான் இவர்களுக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.