இலங்கையில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஒன்றிணைந்து செயற்படுவோம் – சீனா

இலங்கையின் அனைத்து மட்ட அரச தரப்பு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதுடன், பல்வேறு துறைகளிலும் எமது தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக இலங்கைக்கான சீனத்தூதுவர் தெரிவித்திருக்கின்றார்.

 

தமிழ், சிங்களப் புதுவருடத்தையொட்டி இலங்கைக்கான சீனத்தூதுவர் செங் சூவான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

புதுவருடம் பிறந்துள்ள நிலையில், இலங்கையின் அனைத்து மட்ட அரச தரப்பு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதுடன், பல்வேறு துறைகளிலும் எமது தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்.

அத்தோடு இலங்கை மக்களுக்கு சீன அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அமைதியானதும் சமாதானமான புதுவருடமாக இது அமைய வேண்டும் என்று வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கையின் தேசிய அபிவிருத்தி மற்றும் மக்களுக்கான சேவைகளுக்கு எமது இயலுமைக்கு ஏற்றவாறு அனுசரணைகளையும், உதவிகளையும் வழங்குவதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம்.

இப்புதுவருடத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் மேலும் வலுவான ஒத்துழைப்பை கட்டியெழுப்ப முடியும் என்று நம்புகின்றோம் என சீனத்தூதுவர் அவரது வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கின்றார்.