காலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர் மாலையில் உயிரிழந்தார்!

யாழ்.மருதனார்மடத்தில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர் மாலை  வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் அண்மைக்காலமாக இந்துசமயத்துக்கும், இந்துக்களுக்கும் எதிராக அதிகரித்து வரும் தொடர் வன்முறைகளைக் கண்டித்து நேற்று முன்தினம் சனிக்கிழமை(06) யாழ்.மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகி இடம்பெற்றது. குறித்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் அன்று மாலை நிறைவுக்கு வந்தது.

இந்நிலையில் குறித்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசாங்க உத்தியோகத்தரொருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டு மாலை வீடு திரும்பியுள்ளார்.

வீட்டில் குளித்துவிட்டு தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது அவர் திடீரென மயங்கி நிலத்தில் விழுந்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் யாழ்.சுன்னாகத்தைச் சேர்ந்த நாகேந்திரம் சுபா தர்சன்(வயது-40) என்பவரே உயிரிழந்தவராவார்.

இதேவேளை,இவர் அகில இலங்கை இந்து மகாசபாவின் சுன்னாகம் ஒருங்கிணைப்பாளராகவும் விளங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.