சூர்யாவின் சிறப்பு பிரார்த்தனை!

சுதா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் சூர்யா 38 படம் தொடங்குவதையொட்டி அஜ்மீர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார்.

‘தானா சேர்ந்த கூட்டம்‘ படத்துக்குப் பிறகு நடிகர் சூர்யா நடித்து முடித்திருக்கும் திரைப்படம், ‘என்.ஜி.கே’. செல்வராகவன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கின்றனர். படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.
இதுதவிர, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்திலும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலமாக சூர்யா மூன்றாவது முறையாக கே.வி.ஆனந்துடன் கைகோர்த்துள்ளார். இதில், மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் ஆர்யா, சயீஷா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மேலும், ‘உறியடி 2’ படத்தை தயாரித்தும் இருக்கிறார்.
இந்நிலையில், சூர்யா நடிக்க இருக்கும் அடுத்த படத்தை ‘இறுதிச்சுற்று’ சுதா இயக்க இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கும் இந்தப் படத்தின் டைட்டில் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், படத்தின் இயக்குநர் சுதாவுடன் அஜ்மீர் தர்காவுக்கு சென்றிருக்கிறார் சூர்யா. தன்னுடைய நண்பரும் 2டி நிறுவன நிர்வாகியுமான ராஜசேகரன் கற்பூரபாண்டியனையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். பிரார்த்தனையின் போது இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.