மைத்திரி ஊழல்- அவுஸ்திரேலிய ஊடகச் செய்தி -வெளிவிவகார அமைச்சு மௌனம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தவறு செய்திருப்பதாக உறுதி செய்யப்பட்டால், உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட வேண்டும்.

அவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் ஒரு வார்த்தை கூட பேச போவதில்லை என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை விசித்திரமானது. சீனாவின் உதவியுடன், மஹிந்த ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் சீனாவுக்கே எடுத்துக் காட்டி உதவி செய்யுமாறு பிரதமர் கோரியுள்ளார்.

எந்தவொரு தவறு செய்தவரும் ஜனாதிபதியுடன் சேர்ந்தால் அவர் தூய்மைப்படுத்தப்படுகின்றார். இது சரியாக ஒரு துணிச்சலவை செய்யும் நிறுவனம் போன்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் அவுஸ்திரேலிய ஊடகம் வெளியிட்ட ஊழல் செய்தி தொடர்பில் வெளிவிவகார அமைச்சு எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

இந்த விடயங்களை மூடி மறைக்க அரசாங்கம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.