யுத்தத்தின் போது அக்கறை காட்டாத மனித உரிமை அமைப்புக்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் தலையீடு செய்வது ஏன்?

நாட்டில் மூன்று தசாப்தகாலமாக யுத்தம் நிலவிய போது எவ்வித அக்கறையும் காட்டாத மனித உரிமை அமைப்புக்கள் தற்போது யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுவ் மக்கள் சுமுகமானதொரு வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு முயற்சிக்கின்ற போது தேவையின்றி ஏன் தலையீடு செய்கின்றன,இது இனங்களுக்கிடையில் முறுகல் நிலையைத் தோற்றுவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடு என்றே கருதவேண்டியுள்ளது.

எனவே அரசாங்கத்திற்கு முதுகெலும்பு உண்டெனின் ஸ்திரமான தீர்மானமொன்றை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள்சபை மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் பிரிட்டனால் சமர்ப்பிக்கப்பட்ட 40(1) தீர்மானம் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு இன்னும் இருவருட காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் தொடர்பில் வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.