திருகோணமலையில் உயிரிழந்த அவுஸ்திரேலியர்!

திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புராமலை தீவு பகுதியில் அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த வயோதிபரொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியா – சிட்னி நகரைச் சேர்ந்த ஜோன் ஹோல்டர் (70 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த அவுஸ்திரேலியர் குச்சவெளி பகுதியில் ஹோட்டலில் தங்கியிருந்தவேளை புராமலை தீவு பகுதிக்கு குளிக்கச் சென்றுள்ளதாகவும் அதே நேரத்தில் நெஞ்சில் வலி ஏற்பட்டுள்ளதாகவும் அதனையடுத்து நிலாவெளி பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதனையடுத்து நிலாவெளி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

அத்துடன் இது குறித்த விசாரணைகளை குச்சவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.