யுத்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமாயின் பதிலளிக்க தயார்!

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமாயின் அதற்கு பதிலளிக்க தயார் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “யுத்தகாலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயின் எந்தவொரு நீதிமன்றத்திற்கும் வந்து பதிலளிக்க தயார். இந்த பிரச்சினைகளுக்கு உள்நாட்டு விசாரணைகளினூடாகவே தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.

யுத்த செயற்பாடுகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் தமது சுய அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்திக்கொண்டதாலேயே இன்று இலங்கை சர்வதேச விசாரணைகளை அணுகவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இலங்கையில் யுத்தகாலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பாக சர்வதேசத்தின் விசாரணைகளில் இருந்து வெளியேற வேண்டுமானால் குற்றவாளிகள் மீதான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.