இன்று முன்னாள் கடற்படைத் தளபதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்…!  

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, வாக்குமூலம் வழங்குவதற்காக சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

மார்ச் மாதம் 11 ஆம் திகதி அவரிடம் சுமார் 8 மணி நேர விசாரணை இடம்பெற்றிருந்த நிலையில் மார்ச் மாதம் 13 ஆம் திகதி இரண்டாவது நாளாகவும் அவரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டது.

இந்நிலையில் இன்று (19) மூன்றாவது தடவையாக வாக்கு மூலம் வழங்குவதற்காக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாக தெரிவித்து அட்மிரல் வசந்த கரன்னாகொட மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதன்படி முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைது செய்வதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதுடன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கவும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.