வவுனியாவில் வெடிக்காத நிலையில் இரு மோட்டார் குண்டுகள் மீட்பு!

வவுனியா நெடுங்கேணியில் நேற்று மாலை விறகு வெட்ட காட்டுக்குச் சென்ற இருவர் வெடிக்காத நிலையில் இரண்டு மோட்டார் குண்டுகளை அவதானித்துள்ளனர்.

இதையடுத்து நெடுங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு அக் குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்கு விஷேட அதிரடிப்படையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை 4மணியளவில் நெடுங்கேணி ஜயனார் கோவிலுக்கு பின்புறமுள்ள காட்டுப்பகுதிக்கு இருவர் விறகு வெட்டுவதற்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் மரம் ஒன்றில் இறுகிய நிலையில் இரண்டு மோட்டார் குண்டுகள் வெடிக்காத நிலையில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து நெடுங்கேணிகாவல் துறைக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர்  புளியங்குளம் விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து இன்றைய தினம் நீதிமன்ற அனுமதியைப் பெற்று இரண்டு குண்டுகளையும் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினர்  மேலும் தெரிவித்துள்ளனர்.