மசூதியில் துப்பாக்கி சூடு- ஆஸ்திரேலிய நபருக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக் காவல்!

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய ஆஸ்திரேலிய நபரை ஏப்ரல் 5-ம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த  சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, கொலை குற்றம்சாட்டப்பட்ட பிரென்டன் டாரன்ட் என்னும் 28 வயதான ஆஸ்திரேலியர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வெள்ளை நிற சட்டை அணிந்து இருந்த அவர், கைவிலங்கு அணிவித்தபடி ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது பிரென்டன் டாரன்ட் ஜாமீன் எதுவும் கோரவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை பிரென்டனை காவலில் வைக்கும்படி உத்தரவிட்டனர். பிரென்டன் டாரன்ட் மீது மற்ற குற்றச்சாட்டுகள் விரைவில் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்றத்தில், பிரென்டன் டாரன்ட் ஆஜர்படுத்தப்பட்டதால், நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மசூதி தாக்குதலில் காயமடைந்த 4 வயது குழந்தை உள்பட 42 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.