மாதவன் படத்தில் சூர்யா, ஷாருக்கான்!

மாதவன் இயக்கி நடிக்கும் நம்பி நாராயணனின் வாழ்க்கைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா மற்றும் ஷாருக்கான் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

மணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்து’ படத்தில் சூர்யா – மாதவன் இணைந்து நடித்து இருந்தனர். தற்போது 15 வருடங்களுக்கு பிறகு சூர்யாவும், மாதவனும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.
மாதவன் தற்போது இயக்கி நடித்து வரும் திரைப்படம் ராக்கெட்ரி: நம்பி விளைவு. ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவரது வாழ்க்கை ‘ராக்கெட்ரி’ என்ற தலைப்பில் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படமாகி வருகிறது.
இதில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்கிறார். இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறிது நேரம் வருவதுபோல் அவரது கதாபாத்திரம் இருந்தாலும் கதைக்கு திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் இந்தி பதிப்பில் சூர்யா கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்கிறார். இதில் சிம்ரன் உள்பட மேலும் பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.