‘சிம்லா’ ஒப்பந்தத்தின் பிரகாரம் விடுவிக்கப்படுவாரா அபிநந்தன்?

‘சிம்லா’ ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்திய விமான அபிநந்தன் பாதுகாப்பாக மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா? என்ற கேள்வி தற்போது உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன?

* சிம்லா ஒப்பந்தமானது வங்காளதேச விடுதலை போரினைத் தொடர்ந்து இந்தியா – பாக்கிஸ்தானிடையே கைச்சாத்திடப்பட்டது.

* இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத் தலைநகரான சிம்லாவில் இந்திய பிரதமர் இந்திரா காந்தியும் பாகிஸ்தான் அதிபர் ஜூல்பிக்கார் அலிபூட்டோவுக்குமிடையே 1972 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் திகதி கையெழுத்தானது.

*  இதனூடாக இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இருந்த பிணக்கு, மனக்கசப்புகள் மற்றும் காஷ்மீர் குறித்தான சர்ச்சைகள் முடிவுற்று இருதரப்பு நல்லுறவுகள் மேம்பட வழிவகுத்தது.

* காஷ்மீர் விவகாரம் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டியது என்றும், ஐக்கிய நாடுகள் சபை உட்பட மூன்றாவது நபர் யாரும் தலையிடக் கூடாது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

* இரு நாடடு இராணுவக் கைதிகளையும் பரஸ்பர ரீதியில் பாதுகாப்பாக மீண்டும் ஒப்படைத்தல். (இதன் மூலம் பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியா 200 இராணுவ வீரர்களை மீண்டும் ஒப்படைத்தது.)

இந்த நிலையில் மேற்கண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் அபிநந்தனை உடனடியாக மற்றும் பாதுகாப்புடன் திருப்பி ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி இராஜதந்திர ரீதியில் பாகிஸ்தான் வெளிவிவகார துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் அபிநந்தனை பாதுகாப்பாக விடுதலை செய்தால் இரு நாடுகளுகிடையேயான பிரச்சினை சுமூகமாக முடிவடைந்து விடும்.

அவ்வாறு இல்லையென்றால் இப் பிரச்சினை ஏற்கனவே கைச்சாத்திடப்பட்ட ஜெனிவா ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட்டால் பன்னாட்டு பிரச்சினையாக மாற்றமடையும்.