மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல்!

மாகாணசபை தேர்தல்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

எதிர்காலத்தில் உறுதியான அரசாங்கமொன்று உருவாக்கப்பட வேண்டும். நிலையான ஆட்சி மாற்றமொன்றினை ஏற்படுத்துவதே தற்போதைய தேவையாகவும் காணப்படுகின்றது.

எனவே எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதிக்கு பின்னர் நிச்சியமாக ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். மேலும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான கலந்துரையாடல்களும் அரசாங்கத்தரப்பில் இடம்பெற்று வருகின்றன. இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நிலையான ஆட்சிமாற்றத்தை தீர்மானிக்கும் தேர்தலாக அமையும்.

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வதற்காக ஜனநாயக தேசிய முன்னணியின்  தலைமையில் பரந்தலவான கூட்டணியையொன்றை உருவாக்கி வருகின்றோம். இந்த கூட்டணியினூடாக தேர்தலில் வெற்றிப்பெற கூடிய  ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வோம். அவ்வாறான வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருகின்றன என்றார்.