கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை (25) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று (25) ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அளித்திருந்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளதை வெளிப்படுத்தியும், தமக்கு இன்னமும் நீதி வழங்கப்படாததைக் கண்டித்தும், இலங்கைக்கு இனிமேலும் கால அவகாசம் வழங்க வேண்டாமென தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும், வணிக அமைப்புகள், தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதோடு கலந்து கொண்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில், வடக்கு, கிழக்கிலிருந்து பல ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று  கூடியுள்ளனர்.

இந்நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஏற்பாடு செய்த ஐ.நா. சபை இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது எனக் கோரிய போராட்டம் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இடம்பெற்று வருகின்றது.

அப் போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அரசியல் தலைவர்கள் அரசியல் கட்சி உறுப்பினர்கள் மத குருமார் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொது அமைப்ப்புக்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தற்போது கலந்து கொண்டு ஏ ஒன்பது வீதியை மறித்து ஐ. நா.வின் கவனத்தை ஈர்ப்தற்க்கான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் “அரசே பதில் சொல்” ,  “சர்வதேசமே நீதியை வழங்கு” , “ காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே” , “ இராணுவமே ஒட்டுக் குழுக்களே பதில் கூறுங்கள்” , “ சர்வதேசமே நீதியை நிலைநாட்டு” , “ எனது அப்பா எங்கே எனக்கு அப்பா வேண்டும்”, “ நீதி தேவதையே எமக்கு நீதி வேண்டும்” , “  போதும் போதும் இனியும் எம்மை ஏமாற்றாதே”, “ விசாரணைகளை முன்னெடுக்காமல் காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் என்ன செய்கிறது”, “ அரசே புதைத்தது யார் புதைக்கப் பட்டது யார் அரசே பதில் கூறு” போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் பல கோசங்களை எழுப்பியவாறும் கடுமையான வெயிலின் மத்தியிலும் நடு வீதியில் அமர்ந்து போராட்டத்திலீடுபட்டு வருகின்றனர்.