‘எனக்கும் கிராமத்து வாழ்க்கை நல்லா தெரியும்!-உதயநிதி ஸ்டாலின்

அரசியல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வரும் வேளையிலும் சீனு ராமசாமி இயக்கத்தில் தான் நடித்துள்ள ‘கண்ணே கலைமானே’ படத்தை விளம்பரப்படுத்தும் ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அடுத்த கட்ட அரசியல் பிரச்சாரத்துக்குத் தயாராகி கொண்டிருந்தவரிடம் பேசியதில் இருந்து தொடங்குகிறது வெளிச்ச உரையாடல்.

‘கண்ணே கலைமானே’ படத்தின் மூலம் என்ன சொல்லியுள்ளீர்கள்?

இது அழுத்தமான கிராமத்து கதை. அழகான அன்பை, குடும்ப உறவு களின் உன்னதத்தை சொல்லும். கமலக் கண்ணன் என்ற விவசாயியாக, மண் புழு உற்பத்தி செய்பவராக வருகிறேன். நிஜத்தில் நான் சென்னையில் பிறந்து, வளர்ந்து, வெளிநாட்டில் படித்தாலும், கிராமத்துக்கும் எனக்கும் நல்ல தொடர்பு உண்டு. நானும் எனது சகோதரியும் அடிக்கடி அம்மா வழி ஊரான திருவெண்காடுக்குச் செல்வோம்.

விடுமுறையை அங்கேதான் கழிப்போம். எனக்கும் கிராம வாழ்க்கை தெரியும் சார். என்னை வைத்து கிராமத் துக் கதை எடுக்க முடியுமா என்று ஆரம் பத்தில் இயக்குநர் சீனு ராமசாமி பயந் தது உண்மைதான். ஆனால், ‘நிமிர்’ படத்தை பார்த்த பின்பு அவருக்கு என் மீது பெரும் நம்பிக்கை வந்து விட்டது.

இந்தப் படத்தில் அரசியல் வசனங்கள் இருக்கிறதா?

கொஞ்சம் அரசியல் வசனங்கள் உள்ளதுதான். ‘நீட்’ தேர்வு பாதிப்பு, விவ சாயிகள் கடன் பிரச்சினை என கதா பாத்திரத்துக்கு தகுந்தாற் போல் வசனம் இருக்கும். மண்புழு விவசாயிகள், அடித்தட்டு மக்கள் வங்கியில் கடன் வாங்குவதில் உள்ள சிரமம் சார்ந்த வசனங்களை கதையோட்டத்துக்கு இடையே பேசியிருப்பேன். நல்ல வேளை தணிக்கையில் எந்தப் பிரச் சினையும் வரவில்லை. தவிர, இது அரசியலை கிண்டல் செய்யும் படமும் அல்ல. ஒரு வாழ்வியலை சொல் லும் குடும்பப் படம். இதில் வேண்டு மென்றே யாரையும் தாக்கி வசனம் பேசவில்லை.

பலரும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிக்க தயங்குவார்கள். இதில் தமன்னா மிக முக்கியமான கதாபாத்திரம் என்கிறார்கள். எப்படி ஒப்புக் கொண்டீர்கள்?

‘தர்மதுரை’ படத்தில் அவரின் நடிப்பு என்னை கவர்ந்தது. இப்படத்திலும் கவர்ச்சி இல்லாமல், வங்கி அதிகாரி யாக, எனக்கு ஜோடியாக பாரதி என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வசனம் ஏன், எப்படி என்று படப்பிடிப்பு தளத்தில் நிறைய கேள்விகள் கேட்பார். அதே சமயம் நடிப்பில் செம ஷார்ப். அப்பாவாக ‘பூ’ ராம், பாட்டியாக வடிவுக்கரசி நடித்துள்ளனர். ‘பூ’ ராம் சார் நடிப்பில் கலக்குவார்.

அடிப்படையில் அவர் ஓர் அரசியல் அமைப்பைச் சேர்ந்தவர். இயக்குநரும் இன்னொரு கட்சிக் கொள்கை மீது பிடிப்பு உள்ளவர். படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் அரசி யல் பற்றி நிறையப் பேசுவோம். எனக்கு அரசியல்ரீதியாகவும் நிறைய விஷயங்களை இந்தப் படத்தின் படப் பிடிப்புத் தளம் கற்றுக் கொடுத்தது. இயக்குநர் சீனு ராமசாமி சாருடன் மீண்டும் இன்னொரு படம் பண்ணு வேன்.

அரசியல் களத்திலும் தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளீர்கள். இனி மேல் எப்படி படங்களை ஒப்புக்கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள்?

இந்தப் படத்துக்குப் பிறகு 3 படங்களில் நடித்துக் கொண்டிருக் கிறேன். ஏப்ரல், மே மாதம் மக்களவைத் தேர்தலுக்காக தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்யப் போகிறேன். சினிமா, கட்சி என இரண்டிலும் பயணம் செய்கிறேன். அதற்கேற்ப நேரத்தை பிரித்துக்கொள்கிறேன். சினிமா எனக்கு சரியாக இருக்குமா என்று அம்மாவுக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது. முதல் படம் வெளியானவுடன்தான் அவர்களுக்கு நம்பிக்கை வந்தது. இப்போது அரசியலுக்கு வந்திருக்கிறேன். அரசியலில் அப்பாவுக்கு துணையாக இருப்பேன்.

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக செய்திகள் அடிபட்டது. இப்போது சொல்லுங்கள் வரும் மக்களவைத் தேர்தல், இடைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?

திருவாரூர் இடைத்தேர்தல் செய்தி வரும்போது படப்பிடிப்புக்காக பிஜி தீவில் இருந்தேன். நான் போட்டியிடுவதாக யாரோ கிளப்பிவிட்டார்கள். இப்போது அந்த எண்ணமில்லை. ஆனால், கண்டிப்பாக, வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்காக ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்வேன். தவிர, தி.மு.க-வைப் பொறுத்தவரையில் தனிநபர் ஒருவர், தான் போட்டியிடப் போவதாக சொல்லிக்கொள்ள முடி யாது. அப்படி அவர் முடிவெடுத்து விட முடியாது. கட்சித் தலைமை தான் வேட்பாளரை தேர்ந்தெடுத்து அறிவிக்கும்.