இம்ரான்கான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படுகிறார்!

இம்ரான்கான் பாகிஸ்தான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படுவதாக அவரது முன்னாள் மனைவி ரெகம்கான் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையொட்டி இந்தியா மட்டும் இன்றி அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தன. எனினும் பாகிஸ்தான் அரசு இது குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இதுபற்றி பேசிய அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கான் புலவாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் இந்தியா அதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும் என ஆவேசமாக கூறினார். தாக்குதல் நடந்த 5 நாட்களுக்கு பிறகு வாய் திறந்ததற்காக இம்ரான்கான் விமர்சனங்களுக்கு உள்ளாகினார்.

இந்த நிலையில், இம்ரான்கான் பாகிஸ்தான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படுவதாகவும், புலவாமா தாக்குதல் குறித்து பேச ராணுவத்தின் உத்தரவுக்காக காத்திருந்ததாகவும் அவரது முன்னாள் மனைவி ரெகம்கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “அவர் ஒரு நாளும் தனக்கு கற்பித்த பாடங்களில் இருந்து மீறுவதில்லை. ராணுவம் எதற்கு அனுமதி அளித்ததோ அந்த அளவே அவர் பேசி உள்ளார்” என கூறினார்.

மேலும் அவர், “இந்தியாவிலோ அல்லது உலகின் பிற நாடுகளிலோ இதுபோன்ற பெரிய தாக்குதல்கள் எங்கு நடந்தாலும் பாகிஸ்தான் பிரதமர் அதற்கு உடனடியாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து” என்றார்.

ரெகம்கானை திருமணம் செய்துகொண்டதை 2015-ம் ஆண்டு ஜனவரி 6-ந் திகதி உறுதி செய்த இம்ரான்கான், அதே ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந் திகதி அவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.