அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் சிறீலங்கா வெற்றி

சிறீலங்கா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று(24)  நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் களமிறங்கிய சிறீலங்கா  அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்கள் சேர்த்தது. துவக்க பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் அடுத்து வந்த குசால் மென்டிஸ் 69 ரன்களும், சண்டிமல் 48 ரன்களும், கேப்டன் மேத்யூஸ் 57 ரன்களும், குசால் பேரேரா 54 ரன்களும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.  அவுஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், பால்க்னர், ஜம்பா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியும் துவக்க விக்கெட்டுகளை விரைவில் இழந்தது. இந்த விக்கெட்டுகளை திசரா பெரேரா கைப்பற்றினார். மூன்றாவது வீரராக களமிறங்கிய கேப்டன் ஸ்மித் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பெய்லி தனது பங்கிற்கு 27 ரன்கள் சேர்த்தார். பொறுப்புடன் ஆடிய மேத்யூ வேட், 76 ரன்கள் விளாசி நம்பிக்கை அளித்தார்.

அவர் அவுட் ஆனபின்னர் அணியின் ரன்ரேட் சரியத் தொடங்கியது. நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த டிராவிஸ் ஹெட் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரது விக்கெட்டை மேத்யூஸ் கைப்பற்றினார். அதே ஓவரில் ஸ்டார்க் ரன் அவுட் ஆனார். பால்க்னர்(13), ஜம்பா(5), ஸ்டார்க் (0) ஆகியோரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் 206 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால், சிறீலங்கா  அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை தரப்பில் அமிலா அபோன்சோ 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பெரேரா 3 விக்கெட்டுகளும், மேத்யூஸ் 32 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி 28-ம் தேதி தம்புலா மைதானத்தில் நடைபெற உள்ளது.