அவுஸ்திரேலிய குடியுரிமையுடைய மாப்பிள்ளைகள் வாங்கிய சீதனம்!

குடும்ப வன்முறையின் ஒரு பகுதியாக சட்டத்தில் சீதனம் வாங்கும் முறையினை உள்ளடக்கவேண்டும் என செனட் குழு அவுஸ்திரேலிய அரசிடம் பரிந்துரைத்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் சீதனம் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் மக்களிடம் முறைப்பாடுகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் செனட் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் அவுஸ்திரேலியாவில் தற்போது நடைமுறையிலுள்ள குடிவரவாளர்களுக்கான திட்டங்களின் கீழ் தற்காலிக விசாவிலுள்ள பெண்களுக்கான பாதுகாப்பு மிகக்குறைவாக உள்ளது.

ஆகவே பெண்களுக்கு எதிரான வரதட்சனைக் கொடுமை பெரும் எண்ணிக்கையில் நடைபெறுகிறது என்று குறித்த அமைப்பு சுட்டியுள்ளது.

தற்கொலைகள் மற்றும் கொலைகளுக்கு சீதனக்கொடுமை பிரதான காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலிய குடியுரிமையுடைய மாப்பிள்ளைகளுக்கு அதிக சீதனம் வாங்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சீதனத்தில் பேசப்பட்ட தொகையைக் கொடுக்காத பெண்கள் மீண்டும் சொந்த நாட்டுக்கு துரத்தப்படுவதாக மிரட்டப்படுகிறார்கள்.

உறுதியளிக்கப்பட்ட சீதனத்தைவிடவும் அதிக பணத்தை தருமாறு நிபந்தனை விதிக்கும் சம்பவங்களும் அதிகம் இடம்பெறுகின்றமையினை செனட் குழு தனது ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் சுமார் 12 யோசனைகளை செனட் குழு அரசிடம் முன்வைத்துள்ளது.

‘economic abuse’ என்ற பதத்தை ஏற்கனவே உள்ள குடும்பச் சட்டத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ள நிலையில் இச்செயற்பாட்டினை குற்றவியல் பிரிவின்கீழ் தண்டிப்பதற்கென்று தனியாக சட்டம் இயற்றப்பட வேண்டும் என இக்குழு பரிந்துரைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.