5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: 12 கடற்படை சாட்சியாளர்கள் வாக்கு மூலம்!

வெள்ளை வேனில் கடத்தி, சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் தொடர்பில் முன்னெடுக்கப்படும் சிறப்பு சி.ஐ.டி. விசாரணைகளில் இதுவரை 12 கடற்படை சாட்சியாளர்கள் நீதிவானுக்கு இரகசிய வாக்கு மூலம் வழங்கியுள்ளனர்.

குற்றவியல் சட்டத்தின் 127 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக கடந்த மூன்று மாதங்களுக்குள் இந்த 12 பேரும் கோட்டை நீதிவான் நீதிமன்றில் இவ்வாறு இரகசிய சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.

குறித்த கடற்படை சாட்சியாளர்கள்,  கடத்தப்பட்ட 11 பேர்  தடுத்து வைக்கப்பட்ட இடங்களிலும், கடத்தலுடன் தொடர்புபட்ட பிரதானிகளின் கீழ் சேவையாற்றியவர்களும் ஆவர் என்பது  விசேட அம்சமாகும்.

இந் நிலையில் இந்த கடத்தல், கப்பம் பெறல் மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில்  இடம்பெறும் குற்றப் புலனயவுப் பிரிவு முன்னெடுக்கும் விசாரணைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இந்த சம்பவத்தை முழுமையாக அறிந்திருந்தும் அதனை முற்றாக மூடி மறைத்து, குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சித்தமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரால் வசந்த கரன்னாகொடவுக்கு  எதிராக சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பிலும் விஷேட விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.

இது குறித்து நீதிமன்றுக்கும் மேலதிக விசாரணை அறிக்கைகள் ஊடாக சி.ஐ.டி. அறிவித்துள்ள நிலையில்,  கரன்னாகொட மீதான பிடியை இருக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.