டிரம்ப் – கிம் வியட்நாமில் சந்திக்க திட்டம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையேயான 2-வது சந்திப்பு வியட்நாமில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி  உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது வடகொரியா. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர்பதற்றம் நிலவியது. குறிப்பாக இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு கடும் மோதல் போக்கு நீடித்தது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறினர். இது உலக நாடுகளுக்கு கவலை அளிப்பதாக அமைந்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். அப்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. எனினும் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது.

இதற்கு தீர்வு காண 2-வது உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேச டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் பரஸ்பரம் விருப்பம் தெரிவித்தனர். அதன்படி இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு இந்த மாத இறுதியில் நடக்கலாம் என தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த சந்திப்பு வியட்நாமில் நடைபெறலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. வியட்நாமின் கடற்கரை நகரமான தனாங் நகரில் இந்த சந்திப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக, இந்த திட்டம் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர்  டிரம்ப், கடந்த 2017ம் ஆண்டு ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக, தனாங் நகருக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.