முன்னாள் முதலமைச்சருடன் ஃபேர்கஸ் ஒளல்டின் சந்திப்பு!

பிரித்தானியாவின் தென்னாசிய திணைக்களத் தலைவரும் இந்திய ஒருங்கமைப்பாளரும் ஃபேர்கஸ் ஒளல்ட் மற்றும் இலங்கையின் உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் முதல்செயலாளர் போல் ஃகிறீன் ஆகியோர் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை நேற்று (24) காலை நீதியரசரின் வாசஸ்தலத்தில் சந்தித்துள்ளனர்.

இதன் போது சில முக்கியமான அடிப்படை விடயங்களைப் பெற்றுத் தருவதாக மக்களிடம் கூறி வாக்குப் பெற்று விட்டு அவை சம்பந்தமாக அரசாங்கத்துடன் கருத்துப் பரிமாற்றம் செய்யாது மிகவும் குறைந்த அளவு சில உரிமைகளைப் பெற இன்றைய தமிழ்த் தலைவர்கள் முயன்றுள்ளதால் அதை மக்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் விளமக்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடைபெறும் விடயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லா விட்டால் 2000 வருடங்களுக்கு மேலான தமிழ் மக்களின் பாரம்பரியமானது ஒரு சில வருடங்களில் இல்லாதொழிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகள் திரும்பவும் கையளிக்கப்பட்டதன் பின்னர் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார நீரோட்டத்தினுள் உள்ளீர்க்கப்பட்டு செயலாற்ற முடியும் எனவும் விளக்கமளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது